Sat. Mar 7th, 2026

ஆசிரியர் தாக்கியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் 13 வயது மாணவன்!

மத்திய பிரதேசத்தில் இசை ஆசிரியர் தாக்கியதில் 13 வயது மாணவன் படுகாயமடைந்து மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம், போபால், ரேவா மாவட்டத்தில் ஒரு தனியார் பள்ளியில் இசை ஆசிரியராக ரிஷப் பாண்டே என்பவர் பணியாற்றி வருகிறார். இவரிடம் அனுஜ் சுக்லா (13) என்ற மாணவர் இசை கற்று வந்தான்.

இந்நிலையில், ஆசிரியர் ரிஷப் பாண்டே அனுஜை கடுமையாக தாக்கியதாக சொல்லப்படுகிறது. ரிஷப் பாண்டே கடுமையாக அனுஜ் கன்னத்தில் அறைந்ததால் அந்த மாணவின் கன்னம் பயங்கரமாக வீக்கம் ஏற்பட்டுள்ளது. வீட்டிற்கு வந்த மாணவனுக்கு முகம் பயங்கரமாக வீங்கியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் மாணவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அனுஜ் சுக்லாவிற்கு முகத்தில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுஜ் சிகிச்சை பெற்று வருகிறான்.

இது தொடர்பாக அனுஜ் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரை பதிவு செய்த போலீசார் ரிஷப் பாண்டேவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இசை ஆசிரியரால் தாக்கியதால் மாணவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.