கன்னியாகுமரி மாவட்டம்: பறக்கை பங்குனி திருவிழா!

கன்னியாகுமரி மாவட்டம், அகத்தீஸ்வரம் வட்டத்தில் நாகர்கோவிலுக்கு தென்கிழக்கே சுமார் 5 கி.மீ. தூரத்தில் பறக்கை என்னுமிடத்தில் அமைந்துள்ளது மதுதுசூதனப் பெருமாள் திருக்கோயில். இந்த பறக்கை மதுசூதனப்பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி பெருந்திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான திருவிழாவானது வரும் ஞாயிற்றுக்கிழமை 26.03.2023 அன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

மதுதுசூதனப் பெருமாள் திருக்கோயில்
விழாவையொட்டி அன்று அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், காலை 8.30 மணிக்கு மாத்தூர் மடம் தந்திரி சங்கர நாராயணரு கொடிமரத்தில் கொடியேற்றுகிறார். விழா நாட்களில் தினமும் சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை, பஜனை, தோல்பாவை கூத்து, இன்னிசை கச்சேரி, வாகன பவனி போன்றவை நடைபெறுகிறது. விழாவில் 29-ந்தேதி காலை 6 மணிக்கு அனுமார் வாகனத்தில் சாமி பவனி வருதல், 8 மணிக்கு மரப்பாணி பூஜை, உற்சவபலி, இரவு 9.30 மணிக்கு ஆதிசேஷ வாகனத்தில் சாமி பவனி வருதல் ஆகியவை நடைபெறுகிறது. 30-ந்தேதி காலை 6 மணிக்கு கற்பக விருஷ வாகனத்தில் சாமி பவனி வருதல், மாலை 6 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் மண்டகப்படி, இரவு 7 மணிக்கு கருடனுக்கு கண் திறந்து பெருமாள் காட்சியருளுதல், 10 மணிக்கு கருட வாகனத்தில் சாமி எழுந்தருளுதல் நடக்கிறது.
7-ம் நாள் விழாவான அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந் தேதி காலை 6 மணிக்கு பல்லக்கில் சாமி பவனி வருதல், இரவு 7 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், 9.30 மணிக்கு இந்திர வாகனத்தில் சாமி பவனி வருதல், 2-ந் தேதி காலை 5.30 மணிக்கு இந்திர வாகனத்தில் சாமி பவனி வருதல், இரவு 7 மணிக்கு நடராஜமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், 9 மணிக்கு பூ பந்தல் வாகனத்தில் நடராஜமூர்த்தி பவனி வருதல் ஆகியவை நடக்கிறது. 3-ந்தேதி காலை 9 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இரவு 9 மணிக்கு சப்தவர்ண நிகழ்ச்சி மற்றும் வெள்ளி கருட வாகனத்தில் சாமி வேட்டைக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது.
விழாவின் இறுதி நாளான 4-ந் தேதி மதியம் 2.30 மணிக்கு வெள்ளி கருட வாகனத்தில் சாமி ஆராட்டு துறைக்கு எழுந்தருதல், இரவு 11 மணிக்கு தெப்பத் திருவிழா ஆகியவை நடைபெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் மதுசூதனப்பெருமாள் பக்தர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.