BSNL அலுவலக தீ விபத்து | தொடர்பு எல்லைக்கு அப்பால் செல்போன் இணைப்புகள் |
ஆகஸ்ட் 01-2019
சென்னையின் மிக நெரிசலான பகுதியாக கருதப்படும் மண்ணடி பகுதியில் உள்ள மத்திய அரசின் தொலை தொடர்பு நிறுவனமான பாரத் சங்சார் நிகாம் லிமிடெட் ( BSNL ) அலுவலகத்தில் திடீரென்று தீப்பிடித்தது. 5 மாடிகள் கொண்ட அலுவலக கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து ஊழியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

தகவல் அறிந்து ராயபுரம், எழும்பூர், திருவல்லிக்கேணி, உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீ-யை கட்டுப்படுத்தும் முயற்சியில் 80 வீரர்கள் ஈடுபட்டனர். மின்கசிவு காரணமாகவே இன்று தீ விபத்து ஏற்பட்டதாக அங்குள்ள ஊழியர்கள் தெரிவித்தனர். 3 மணி நேரம் போராடி தீயை அணைத்த போதும் அங்கிருந்த முக்கிய ஆவணங்கள், தளவாடங்கள் அனைத்தும் தீ-ல் எரிந்து நாசம் ஆகிவிட்டதாக தெரிய வந்துள்ளது. தீயை அணைத்து விட்டாலும் அங்கிருந்து வெளியேறிய கரும்பு புகை நீண்ட நேரம் சூழ்ந்து இருந்ததால் வாகன ஓட்டிகள் சற்று சிரமத்துக்குள்ளாகினர்.
BSNL அலுவலகத்தின் வட சென்னையில் 60 டவர்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் வடசென்னையில் BSNL சேவையை பயன்படுத்தும் தொலைபேசி, இண்டர்நெட், செல்போன் பயன் படுத்தும் அனைவருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அந்த பிரச்சனை விரைவில் சரி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
-நமது நிருபர்
