Tue. May 6th, 2025

ரயில்வே சுரங்கப்பாதை பணியினால் இரயில் ரத்து | இதையறியாத மக்கள் போராட்டம் |

ஜீன், 2-2019

வில்லிவாக்கம் ரயில் நிலையத்தில்… அரக்கோனம் செல்லும் ரயில் வராததால்
நேற்று, ரயில் பயணிகள் 100க்கும் மேற்பட்டோர் சுமார் ஒரு மணி நேரமாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால்… வில்லிவாக்கம் ரயில் நிலையத்தில் பரபரப்பு. வேப்பம்பட்டில் ரயில்வே சுரங்கப்பாதை பணி நடைபெறுவதால் இரவில் அரக்கோணம், திருவள்ளூர் செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

இதையறியாமல், அப்பகுதிகளுக்கு செல்லும் ரயில் பயணியர் வில்லிவாக்கம் ரயில் நிலையத்தில் ஒரு மணி நேரமாக காத்திருந்தனர். ரயில் வராததால் விரக்தியடைந்த 100க்கும் மேற்பட்ட ரயில் பயணியர் நேற்று இரவு, 9:30 மணியளவில் அரக்கோணம் வரை ரயில் இயக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் சென்னையில் இருந்து ஆவடி நோக்கி சென்ற மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. பெரம்பூர் ரயில்வே போலீசார், நிலைய அதிகாரிகள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் 10: 30 மணியளவில் ஆவடி ரயில் அரக்கோணம் வரை இயக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து ரயில் பயணியர் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர்…

நமது நிருபர்